2022-05-06 15:59:49
ஒரு வருட திமுக ஆட்சியில் அறப்போர் இயக்கம் அளித்த புகார்களின் அடிப்படையில் சில ஆரோக்கியமான நிர்வாக மாற்றங்கள் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
கடந்த அதிமுக ஆட்சியில் சென்னை மாநகராட்சி டெண்டர்கள் செட்டிங் செய்யப்படுவதாக அறப்போர் இயக்கம் பல்வேறு புகார்களை ஆதாரங்களுடன் கொடுத்துள்ளோம். இந்த செட்டிங் டெண்டர்களை தடுக்க முழுமையான E Tender கொண்டு வரப்பட வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்துள்ளோம். தற்பொழுது சென்னை மாநகராட்சி அந்த கோரிக்கையை நிறைவேற்றி செயல்படுத்தி வருகிறது. இது தொடர வேண்டும்.
ரேஷன் டெண்டர் ஊழல்களில் கிறிஸ்டி நிறுவனம் வேறு எந்த நிறுவனங்களையும் போட்டியிட விடாமல் அவர்களுக்கு உள்ளேயே போட்டியிட்டு அதிக விலைக்கு டெண்டர்களை செட்டிங் செய்வதாக அறப்போர் அளித்த புகாரை இது வரை விசாரிக்காவிட்டாலும், திமுக ஆட்சியில் ரேஷன் டெண்டர்கள் எடுக்க பல்வேறு நிறுவனங்கள் போட்டியிட வழி செய்யப்பட்டுள்ளது. போட்டி அதிகமாக இருக்கும் இடத்தில் விலை குறைய வாய்ப்பும் அதிகம். இதனால் மக்கள் வரிப்பணம் சேமிக்கப்படும்.
தகவல் அறியும் உரிமை சட்டம் அதிமுக ஆட்சியில் குழி தோண்டி புதைக்கப்படுவதாக அறப்போர் இயக்கம் தொடர்ந்து போராடி வந்துள்ளது. தூங்கும் தகவல் ஆணையர்களை எழுப்பி விடும் விதமாக தகவல் ஆணைய அலுவலகத்திற்கு காப்பி பாக்கெட் அனுப்பும் போராட்டமும் நடத்தப்பட்டது. தற்பொழுது திமுக ஆட்சியில் பல அரசு துறைகளுக்கு Online வாயிலாகவே RTI மனு அளிக்க வழி செய்துள்ளது மிகவும் வரவேற்கத்தக்கது. எளிதாகவும் விரைவாகவும் மனு அளிக்க இது உதவும்.
சட்டசபை நிகழ்வுகளை நேரடியாக ஒளிபரப்ப வேண்டும் என்பது பல்வேறு சமூக ஆர்வலர்களின் பல வருட கோரிக்கை. திமுக ஆட்சியில் அதுவும் சாத்தியமாகியுள்ளது. ஆனாலும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேசும் போது நேரடி ஒளிபரப்பில் மோசடி நடைபெறுவது தடுக்கப்பட்டால் இதன் முழுமையான பயனை மக்கள் பெறுவார்கள்.
674 views12:59