2022-04-30 11:44:47
ராமாபுரம் கலாசத்தம்மன் கோவில் தெருவில் அரசு நிலத்தில் ஒரு சிறிய கோவில் இருக்கிறது. அந்த பகுதியை சேர்ந்த பல்வேறு கட்சி அரசியல்வாதிகள் ஒரு கமிட்டி அமைத்து அந்த கோவிலை சுற்றியுள்ள இடங்கள் அனைத்தும் கோவில் நிலம் என்று ஆக்கிரமிக்கிறார்கள். ஆனால் அது அரசு நிலம் என்பதால் அங்கே தமிழக அரசு துணை மின் நிலையம் அமைக்கிறது. ஆனால் அது கோவில் நிலத்தில் அமைக்கப்பட்டுள்ளது என்றும் அது கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு ஆபத்து விளைவிக்கும் என்றும் கோவில் கமிட்டி சார்பில் வழக்கு தொடுக்கிறார்கள். அந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. அது அரசு நிலம் என்று நீதிமன்றம் உறுதி செய்கிறது. கோவில் கமிட்டி மேல்முறையீடு செய்கிறார்கள். அந்த வழக்கும் தள்ளுபடி செய்யப்படுகிறது.
அந்த கோவிலை ஒட்டியுள்ள சாலையும் கோவில் நிலம் தான் ஆகையால் அதை சாலையாக பயன்படுத்த அனுமதிக்க முடியாது என்று 10 மீட்டர் சாலையில் 7.5 மீட்டர் ஆக்கிரமித்து மண்டபம் கட்டுகிறார்கள். அதை அந்த பகுதி பொதுமக்கள் எதிர்க்கிறார்கள். அதிமுக ஆட்சி காலத்தில் அன்றைய அமைச்சர் பெஞ்சமின் துணையோடு கூட்டு சேர்ந்து சாலை ஆக்கிரமிக்கபடவில்லை என்று அறிக்கை வாங்குகிறார்கள். அங்குள்ள பொது மக்கள் அறப்போர் இயக்கத்திடம் புகார் தெரிவிக்கிறார்கள். அறப்போர் இயக்கம் சார்பில் பல்வேறு புகார்கள் மற்றும் RTI மனுக்கள் போடப்படுகிறது. அந்த பகுதியில் இந்த பிரச்சனையை முன்வைத்து ஒரு பொதுக்கூட்டம் நடத்தப்படுகிறது. அந்த கூட்டத்தில் அரசியல் கட்சிகள் தங்கள் அடியாட்களை அனுப்பி கலவரம் செய்ய முயற்சி செய்கிறார்கள். காவல்துறை தலையிட்டு அவர்களை சமாதானம் செய்து அழைத்து செல்கிறார்கள். ஆனால் அன்றைய அதிமுக அமைச்சர் பெஞ்சமின் உத்தரவின் பேரில் அறப்போர் மீது பொய் வழக்கு போடப்பட்டு அறப்போர் பொருளாளரை அதிகாலை 4 மணிக்கு வீடு புகுந்து காவல்துறை கைது செய்கிறது. அந்த பொய் வழக்கை ரத்து செய்ய அறப்போர் தொடுத்த வழக்கின் அடிப்படையில் அந்த வழக்கு விசாரணைக்கு நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
கோவில் கமிட்டி சாலையில் செய்துள்ள ஆக்கிரமிப்பை அகற்ற அறப்போர் பொது நல வழக்கு தாக்கல் செய்தது. 3 வருடங்களாக அந்த வழக்கை பல்வேறு நீதிபதிகள் விசாரித்தனர். அந்த வழக்கு விசாரணையின் அடிப்படையில் பல கள ஆய்வுகள் நடத்தப்பட்டது. அதில் சாலையின் 10 மீட்டர் அகலத்தின் 7.5 மீட்டர் அகலம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது என்பது பதிவு செய்யப்பட்டது. ஆனால் 3 வருடங்கள் கழித்து தற்பொழுது திமுக ஆட்சியில் திடீரென இது பொது நல வழக்காக தாக்கல் செய்தது சரி இல்லை என்று சொல்லி நீதிபதி வழக்கை தள்ளுபடி செய்கிறார். சாலையில் ஆக்கிரமிப்பு இல்லை என்று வழக்கு தள்ளுபடி செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் கோவிலை சுற்றியுள்ள பகுதிகள் அரசு நிலம் தான் என்று அரசாங்கமும் நீதிமன்றமும் ஒப்புக்கொண்டதும் பதிவாகியுள்ளது. அந்த கோவில் கமிட்டியில் இருந்த இருவர் தற்பொழுது அந்த பகுதி திமுக கவுன்சிலர்களாக இருக்கிறார்கள். மீண்டும் சாலையில் இருந்த அந்த மண்டபத்தை கோவில் கமிட்டி கட்ட ஆரம்பிக்கிறார்கள். அந்த மண்டபத்தால் ஏற்கனவே அந்த வழியாக சாலையில் அமைக்கப்பட வேண்டிய கழிவு நீர் வடிகால் திட்டம் தொடர முடியாமல் நிறுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் மதிப்பீடு 50 கோடி ரூபாய்.
தமிழக வருவாய்த்துறை மற்றும் இந்த அறநிலையத்துறை இந்த ஆக்கிரமிப்பு விஷயத்தில் தங்கள் நிலைப்பாட்டை வெளிப்படையாக தெரிவிப்பார்களா? கோவில் கமிட்டியில் இருந்து தற்பொழுது அந்த பகுதி திமுக கவுன்சிலர்களாக இருக்கும் செல்வக்குமார் மற்றும் ராஜே ஆகியோர் இந்த பிரச்சனையில் தங்கள் நிலைப்பாட்டை மக்களுக்கு தெரிவிப்பார்களா?
நீங்கள் யார் பக்கம்? சாலையை ஆக்கிரமித்து மண்டபம் கட்டுபவர்கள் பக்கமா? அல்லது 2 கிமீ சுற்றி போகும் அந்த பகுதி மக்களுக்கு சாலையை மீட்டுக்கொடுப்பவர்கள் பக்கமா?
493 views08:44