துவரம் பருப்பு டெண்டரில் 120 கோடி கொள்ளை அடிக்க Christy - சுதா | 𝔸𝕣𝕒𝕡𝕡𝕠𝕣
துவரம் பருப்பு டெண்டரில் 120 கோடி கொள்ளை அடிக்க Christy - சுதா தேவி - காமராஜ் போட்ட மெகா திட்டம் முறியடிக்கப்பட்டது. தமிழ்நாடு மக்களின் வரிப்பணம் காப்பாற்றப்பட்டது.
ஒரே மாதத்தில் விடப்பட்ட இரண்டு துவரம் பருப்பு டெண்டர்களில் Christy நிறுவனங்களில் ஒன்றான Rasi Nutri Foods நிறுவனம் ஒரு கிலோவுக்கு 59.50 ரூபாய் வித்தியாசத்தில் டெண்டர் கொடுத்துள்ளது. ரத்து செய்யப்பட்ட முந்தைய டெண்டரில் மூன்று நிறுவனங்கள் மட்டுமே பங்கேற்றன. மூன்றில் Rasi நிறுவனம் Christy நிறுவனத்திற்கு சொந்தமானது. மற்ற இரண்டு நிறுவனங்களும் (Kendriya மற்றும் Nacof) Christy நிறுவனத்திற்காக டெண்டர் எடுப்பவர்கள். மூவருமே ரத்து செய்யப்பட்ட பழைய டெண்டரில் கிலோவுக்கு 143.50 ரூபாய்க்கு அதிகமாக விலை கொடுத்துள்ளனர். இவர்கள் மட்டுமே பங்கேற்று விலையை அதிகமாக கொடுக்கும் செட்டிங் டெண்டர் இது தான்.
இந்த செட்டிங் டெண்டர்களுக்கு எதிராக அறப்போர் இயக்கம் தொடர்ந்து போராடி புகார் அளித்து வருகிறது. இந்த புகாரின் விளைவாக புதிதாக பதவி ஏற்ற தமிழ்நாடு அரசு பழைய டெண்டரை ரத்து செய்துவிட்டு பல நிறுவனங்களும் பங்குபெற்று போட்டியிடும் வகையில் டெண்டர் விதிகளை மாற்றி புதிய டெண்டர் வெளியிட்டது. அதன் விளைவு 4 Christy நிறுவனங்களோடு சேர்த்து மொத்தம் 9 நிறுவனங்கள் புதிய துவரம் பருப்பு டெண்டரில் பங்கேற்றுள்ளன. சந்தையில் கிலோ 100 ரூபாய்க்கு குறைவாக கொள்முதல் விலையில் கிடைக்கும் துவரம் பருப்பு டெண்டரில் பங்கேற்ற 8 நிறுவனங்கள் கிலோ 100 ரூபாய்க்கு குறைவாகவே டெண்டர் கொடுத்துள்ளன. இதன் மூலம் தமிழ்நாடு அரசு அதிக விலைக்கு துவரம் பருப்பு வாங்கி அதன் மூலம் கோடிக்கணக்கில் மக்கள் பணம் கொள்ளை போவது தடுக்கப்பட்டது.
ஆனால் கிலோ 146.50 ரூபாய்க்கு முதலில் டெண்டர் கொடுத்த Christyன் Rasi Foods நிறுவனம் டெண்டரில் போட்டி உருவான உடனே இந்த முறை கிலோ 87 ரூபாய் அதாவது கிலோவுக்கு 59.50 ரூபாய் குறைவாக டெண்டர் கொடுக்கிறது. இதன் மூலம் Christy நிறுவனங்கள் இதற்கு முன்பாக எடுத்த அனைத்து டெண்டர்களிலும் போட்டியே இல்லாமல் பல ஆயிரம் கோடி ரூபாய் தமிழ்நாட்டு மக்களிடம் கொள்ளை அடித்தது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
கடந்த 5 வருடங்களாக ரேஷன் கடைகளுக்கு பொருட்கள் சப்ளை செய்வதில் Christy - சுதா தேவி - காமராஜ் கூட்டணி அடித்த கொள்ளைகள் முழுமையாக விசாரிக்கப்பட வேண்டும். இப்படிப்பட்ட பகிரங்க கொள்ளைகளில் ஈடுபட்ட Christy நிறுவனங்கள் உடனடியாக BlackList செய்யப்பட வேண்டும். இதற்கு துணையாக இருந்த சுதா தேவி மற்றும் காமராஜ் இருவர் மீதும் வழக்கு பதிந்து விசாரணை செய்து கடும் தண்டனை கொடுக்க வேண்டும். இவர்களால் தமிழ்நாட்டுக்கு ஏற்பட்ட நஷ்டத்தை இவர்களிடம் இருந்து அபராதமாக வசூல் செய்ய வேண்டும் என்று அறப்போர் இயக்கம் கேட்டுக்கொள்கிறது.